zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்

Monday, 10 June 2013

கிரிகெட் சினிமா


இவை இரண்டையையும் பற்றி பேசுவதில்லை, எழுதுவதில்லை என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். எதை பின்பற்ற நினைத்தாலும் அது முடிவதில்லை, அது வேறு கதை.சொந்தக்கதை, சோகக்கதை. இன்று இவைகளை மேலோட்டமாகப்பார்த்தாலும் தோன்றும் சில எண்ணங்களை பகிர விரும்புகிறேன். 
கிரிக்கெட்டில் சூதாடுபவர்கள் பெரிய மனிதர்கள். இவர்களுக்கு நாட்டு நடப்பு நன்றாகவே தெரியும். இது போல் முந்தைய சூதாட்டங்களில் எப்படி இவை எப்படி முடிவு செய்யப்படுகின்றன  என்று என் போன்ற சாதாரணர்களுக்கும் தெரியும். தெரிந்தும் எப்படி பணத்தை கொண்டு கொட்டுகிறார்கள்.

சினிமாவில் நடிப்பவர்களும் இதில் சோரம் போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆதர்ஸம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஏன்?

தமிழும் தமிழனும்


தமிழ் தமிழனின் மொழி. தெரிந்த இந்த விஷயத்தை சொல்ல க்காரணம். தமிழ் வாழ்க என்று சொல்வதற்கும் தமிழன் வாழ்க என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை அலசுவதற்காக. தமிழ் என்னும் மொழி தமிழன் என்பவன் மரித்தாலும் வாழும். ஆனால் தமிழன் இப்படி தமிழை கொலை செய்தால் வாழாது. பாரதி எந்த சூழ்நிலையில் தமிழ் இனி மெல்லச்சாகும் என்று சொன்னார் எனத்தெரியவில்லை.( அவர் சொன்னதில் இது ஒரு பகுதியே, முழுவதும் படிக்கும் பொழுது வேறு context என்பது புரியும்) ஆயின் இன்று தமிழன் பேசும் தமிழால் நிச்சயமாக தமிழ் சாகும்.

என் தொலைக்காட்சி பெட்டியில் சன், ஜெயா தீபம் யாழ் போன்ற காணொளிகள் வருகின்றன. இதில் ஒரு நாள் காலையில் ஜெயா, தீபம் இரண்டிலும் கண்டவை. ஜெயா தொலைக்காட்சியில் ஒரு கல்வியாளர் தென் தமிழ்நாட்டில் தமிழ் குடும்பத்தில் பிறந்து கல்வி கற்று இன்று கற்பிப்பவர். தீபத்தில் செய்திகள். ஜெயா காட்சியில் கல்வியாளர் பேசியதில் 50% ஆங்கில வார்த்தைகள், அல்லது அதற்கு மேலே. தீபம் செய்தியில் நிருவனங்கள் பெயர் சுருக்கி சொல்லப்பட்ட போது மட்டும் ஆங்கில எழுத்துக்கள் உச்சரிக்கப்பட்டன. சென்னையில் நடைபாதையில் யாரிடமும் வழி கேட்டால் ஆங்கிலம் கலக்காத பதில் வராது. இவர்கள் மத்தியில் தூய தமிழ் பேசினால் கேலியும் கிண்டலும். சில சமயங்களில் நாட்டுப்புறம் என்ற அடையாளம் வேறு. சரியான வார்த்தை தெரியாத பொழுது ஆங்கில வார்த்தை உபயோகம் பொறுத்துக்கொள்ளப்படலாம்.   ஆனால் அஸ் அ மேட்டர் ஒஃ கோர்ஸ் இங்லீஷை யூஸ் பண்ணணுமா. ராங் இல்லையா. டமில் வோர்ட்ஸை யூஸ் ப்ண்ணாம விட்டொம்னா வோண்ட் வீ பர்கெட் தெம். டாடி மம்மிகளே சில்றன்ஸ்கு டீச் பண்ணலைனா தென் ஹூ வில் டு இட். டமில் வால்க. 

Tuesday, 4 June 2013

நன்நோக்கு


கருத்து சுதந்திரம் என்பதன் உண்மையான, சரியான புரிதல். யாருக்கும் சொந்தமாகக்கருத உரிமையுளது என்பதுதான். எதிர்கருத்துள்ளவரெல்லாம் எதிரிகள் அல்ல. நமக்கு எதிர் கருத்து உள்ளவர் கருத்தை கருத்த்தால் மட்டுமே எதிர் கொள்ளவேண்டும். அவரியே எதிரியாக நினைத்து தனிநபர் தாக்குதல் நாகரீகமல்ல. யாரோ ஒரு மேற்கு நாட்டவர் சொன்னது போல உன் கருத்து என் கருத்துக்கு மாறுபட்டால் அதை நான் வன்மையாக எதிர் கொள்ளுவேன். அதே நேரத்தில் அக்கருத்து கொள்ள உள்ள உன் உரிமைக்காக உன்னைக்காட்டிலும் வன்மையாக போராடுவேன். மேலும் உன் தனி நடத்தையை கண்டிக்கும் முன் என் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுக்க முயல்வேன். 

mixing many sayingsக்கு மன்னிக்கவும்.

என் எண்ணங்கள்


தமிழரின் சில நிலைப்பாடுகள் எனக்குப்புரிவதே இல்லை. கடந்த நாற்பது- அய்ம்பது வருடங்களாக திராவிடக்கழகங்களையே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறோம். அதன் முந்தைய காலத்தில் காங்கிரஸ் ஆட்சி. இதை ஒப்பிட்டு நோக்குவதில் அடிப்படையான சிக்கல். அந்த அந்த காலநிலையில் உள்ள வேறுபாடுகள். சொல்வதானால் அடிமைப்பட்டிருந்த காலத்தில் கட்டமைப்பு வசதிகள் வெள்ளையர் வசதிக்கு மட்டுமே இருந்தன. அதில் நம்மவர் எப்படி காரியம் சாதித்துகொண்ட வகையில் நமக்கும் சில முன்னேற்றங்கள் கிடைத்தன. சுதந்திரத்திற்குப்பின்பு மக்கள் நலனுக்காக திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆகையால் முன்னேற்றம் கண்கூடாகத்தெரிந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்ததாலும் வசதிகள் அதிகமாக செய்யப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் தமிழகம் 1967க்கு முன்னும் பின்னும் கண்ட முன்னேற்றங்களை ஒப்பிட்டால் கிடைப்பதென்ன.
உதாரணத்திற்கு சாலை வசதிகள், மின்சாரம், சுகாதாரம், அடிப்படை கல்வி விவசாயம் ஆகியவை 67க்கு முன் செய்யப்பட்டவை அதற்கு பின் செய்யப்படவில்லை. தொழில் நுட்பம் தொலைத்தொடர்பு போன்றவை 67க்கு பின் முன்னேறின. இது ஒரு மேம்போக்கான ஒத்து நோக்கு. 
இதனிலும் முக்கிய விஷயம் அரசு மக்களுக்கு அடுத்தது திராவிட ஆட்சியில்தான். சுதந்திரத்திற்கு பிறகு ஆண்ட காங்கிரஸ் வெள்ளைக்காரர்களீன் பல பழக்கங்களை கடைப்பிடித்தது. அவர்கள் சட்ட மன்ற வேட்பாளர்கள் பெருப்பாலும் பணக்காரர்களூம், ஆதிக்க ஜாதிகளிலும் இருந்து வந்தவர்கள். இதற்கு நாற்பதுகளிலும், அய்ம்பதுகள்லும் திராவிட கட்சிக்கு ஆதரவு தேனீர் விடுதி, நாவிதர் கடைகள், போன்ற இடங்களில் இருந்துதான். திராவிட கழக பேச்சாளர்களூக்கு ஆகும் செலவுகளை சமாளிக்க அவர்கள் மனைவிகளின் நகைகள் வரை விற்ற கதைகள் உண்டு. இரவு பேசிவிட்டு நாவிதர் கடையில் உறங்கி விட்டு காலை உணவை தேனீர் கடையில் முடித்து விட்டு பேருந்துகளை பிடித்தனர் பல திராவிட கட்சி தலைவர்கள். அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காரர்கள் அவர்களின் பூர்வீக வசதிகளாலோ, அப்பொழுது இருந்த பதவியினாலோ மகிழுந்துகளில் வந்து மாளிகையில் தங்கிச்சென்றனர். அவர்கள் அனுபவித்தது பொதுப்பணமல்ல. பதவியிலிருந்த காங்கிரஸ்காரர்கள் அவர்களைப்பொறுத்த வரை சாதாரணமாக இருந்தாலும், பதவியின் மேல்பூச்சுகள் அவர்களை ஆடம்பரமாகத்தான் காட்டியது. 
திராவிடக்கட்சியினரின் அலங்கார ஆனால் அர்த்தமில்லாத பேச்சுக்கள் அன்றைய இளைஞர்களை கவர்ந்தது. அதற்கு மேல் சினிமா மாயை. அறுபதுகளில் கிராமத்து இளைஞர்களை கவர நினைத்த ககம்யூனிஸ்டுகள். மருவூர் கோபாலமெனொன் ராமச்சந்ரமெனொன் கவர்ச்சிக்குமுன் தோற்றனர். காங்கிரஸ் பேச்சை விட செயலை நம்பியது. செய்த நன்மைகளை மக்களுக்கு சொல்வதற்கு ஆகும் செலவில் இன்னொரு செயலையும் செய்து விடலாம் என்று நம்பினர். அறுபத்து ஏழுக்கு முன்பு வாய்ப்பு இல்லாததால் பல திமுகவினர் படாடோபமாக இருக்க முடியவில்லை. திரைத்துறையினாலோ, அல்லது வேறு வகையிலோ வசதியுள்ளவர்கள் ஆடம்பரமாகவே இருந்தனர். அது மக்கள் கண்ணில் தவறாகத்தெரியவில்லை.
இந்ந்லையில் அறுபத்துமூன்றில் அல்லது அதற்கடுத்த ஆண்டில் வெடித்த இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி. இந்தி ஆட்சிமொழி என்ற தீர்மானம் தமிழை கொல்வதற்கான சதியென்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்று மக்களை தூண்டிய தலைவர்கள் அதனால் வரும் சாதக, பாதகங்களை யோசித்து முடிவெடுத்தார்களா? இல்லை. சிந்தித்து ப்பார்த்தால் இதன் பயன் என்ன? நடுவண் அரசில் இந்திதான் ஆட்சி செலுத்துகிறது. தமிழகத்தில் உள்ள மைய அரசு அலுவகங்களில் இந்தி இருக்கிறது. திருத்தணி தாண்டினால் வட்டார மொழி தெரியாவிட்டாலும் இந்தி இருந்தால் தொடர்பு கொள்ளலாம். ஆங்கிலம் இருந்தாலும். தமிழ் மட்டும் இருந்தால் போதாது. அது அன்று கிளர்ச்சியை தூண்டிய தலைவர்கள் உணர்ந்தார்களென்றால் அவர்கள் சாதாரணத்தமிழனை பலியிட்ட கயவர்கள். அதை அவர்கள் உணரவில்லை என்றால் தொலைநோக்கு இல்லா மடையர்கள். தமிழனுக்கு இந்தி தேவையில்லைதான், தமிழகத்தில் இருக்கும் வரை. ஆங்கிலம் இருந்ததால் இன்று பல துறைகளீல் தமிழன் முன்னேற முடிகிறது. ஆனால் தமிழ் முன்னேறமுடியாது. தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும். 
67ல் இருந்து இன்று வரை ஆட்சி செய்த கட்சிகள் தமிழகத்திற்கு நன்மை செய்தனவா, அல்லது தீமை செய்தனவா. அண்டை மாநிலங்களுடன் உள்ள உறவு. முல்லைபெரியார், காவிரி பிரச்சினைகளை மேலோட்டமாகப்பார்த்தாலெ நமக்கு நிலைமை புரியும். காவிரி நீர் வரத்து 72 வரை பொறியாளர், அரசு செயலர்கள் அளவிலேயே முடிவெடுக்கப்பட்டது. அன்று இருந்த செயலர் கர்நாடகத்தின் செயலரை அழைத்து நீர் திறந்துவிடச்சொன்னால் திறந்துவிடப்பட்டது. அதற்கு பின் அரசியல்வாதிகள் நுழைந்தவுடன் கதை கந்தல். முல்லைபெரியார் விவகாரத்தின் வேர் கடந்த நூற்றாண்டில். அன்றைய காலத்தில் முல்லைபெரியார் இருக்கும் இடம் அன்றைய திருவிதாங்கூர் அரசை சேர்ந்தது அல்ல. அன்று இருந்த வெள்ளையர் அரசு  அவர்களுக்கு சொந்தமில்லாத இடத்திற்கு வாடகை தருகிறேன் என்றவுடன் சரியென்று சொல்லி விட்டார் திருவனந்தபுரத்து மன்னர். சுதந்திரம் கிடைத்தவுடன் அதன் தொடர்ச்சியாக கல்லார் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் கேரள எல்லைக்குள் உருவாகி ஓடும் கல்லாறை மலையை குடைந்து இப்பக்கம் கொண்டு வருவது.
அதை அன்றைய கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளை சும்மா இருந்த அந்த காட்டில் இரவோடு இரவாக மக்களை கொண்டு வந்து இறக்கி குடிசை போட வைத்து அது மக்கள் குடியிருக்கும் பகுதி அவர்கள் பாதிக்கப்படுவர் என்று மறுத்து விட்டனர். திராவிட ஆட்சியில் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு மேலே உருவாகும் நீர்நிலை தமிழகப்பகுதியில் அழிக்கப்பட்டு கேரளத்துடன் சேர்க்கப்ப்ட்டுவிட்டது நான் கேட்ட செய்தி.

விவசாயத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கி விசைமூலம் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வழி செய்யப்பட்டது. இன்று இலவச தொலைக்காட்சி, இன்னவை நாட்டின் உற்பத்தியை எப்படி பெருக்கும் என்று எனக்குத்தெரியவில்லை. காங்கிரஸுக்கு வோட்டு போடச்சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது ஆள்பவர்களை என்னால் சகிக்கமுடியவில்லை.

Thursday, 4 April 2013

மாணவர் கிளர்ச்சிகள்


தமிழகத்தில் நான் அறிந்த மூன்று மாணவர் போராட்டங்கள்
சுதந்திரத்திற்கு முந்திய மாணவர் போராட்டங்களைப்பற்றி எனக்கு நேரடியாகதெரியாது. என் தந்தை சொல்லகேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். நான் நேரில் பார்த்த மூன்று போராட்டங்கள். அறுபதுகளின் முற்பகுதியில் இந்தி எதிப்பு போராட்டம், 73 செப்டம்பர் எம்ஜியார் ஆதரவு கிளர்ச்சி, இப்பொழுது பார்க்கும் ஈழம் பற்றிய கிளர்ச்சி. மூன்றிலும் நான் பார்வையாளனே. இரண்டு கடந்தவை, மூன்றாவது நிகழும் ஒன்று.
இதன் ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன.
இந்தி கிளர்ச்சியில் மொழிஉணர்வு அரசியல் தலைவர்களால் ஒருமுகப்படுத்தப்பட்டு அன்றைய ஆட்சியின் எதிர்ப்பாய் திருப்பிவிடப்பட்டது. மொழிப்போர் என்றழைக்கப்பட்டது. இதன் விளைவு மாணவர் சக்தி அடுத்த வந்த தேர்தலில் பயன்ப்டுத்தப்பட்டது. 67 தேர்தலில் கல்லூரி பேருந்தில் விருதுநகர் சென்று மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அந்த ஊர் தெருக்களில் வீடு வீடாகச்சென்று காலில் விழுந்து ஓட்டுக்கேட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றைய அரசு ஆட்சியை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இதன் பின்விளைவுகளை தமிழகம் இதுவரை சந்த்தித்து வருகிறது. 73ல் மாணவர்கள் கிளர்ந்து எழுந்தது எம்ஜிஆர் என்ற மனிதர் முன்வைத்து. அதற்கு முன்பும் அவருக்கு திமுகவில் நெருக்கடி நேர்ந்திருக்கிறது. அப்பொழுது அவர் நடித்து வெளி வந்த படம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் நான் அறிவது. எம்ஜிஆரும் திமுகவும் இணைந்து அடைந்த வெற்றிகள் அறுபதுகள் காலகட்டத்தில் அவரால் தனியாக அடைய முடியவில்லை. அன்று திமுகவில் இருந்தவர்கள் கட்சியினால் எம்ஜிஆர் அதரவாளர்கள். எழுபத்து மூன்றில் அண்ணா இல்லை. ஆட்சிப்பொறுப்பில் இருந்தனர். கொள்கைகள் நீர்த்துப்போய் தனிமனித வேறுபாடுகள் வீர்யம் பெற்றன. மேலும் இளைஞர்கள் மாணவர்கள் ஒரு லட்சியமென்று எம்ஜிஆரை ஆதரித்தனர். அவர் கட்சி எழுபத்து ஏழில் ஆட்சிக்கு வந்தது. இது இது வரை நடந்தவை. 
இப்பொழுது நடக்கும் கிளர்ச்சி ஈழத்தை முன்வைத்து நடக்கிறது. இது தமிழகத்தில் என்ன அரசியல் மாற்றங்களை நிகழ்த்தும். அறுபத்து ஏழில் மாணவர் வேறு பல சக்திகளின் கூட்டாக ஆட்சியை மாற்ற காரணமாக இருந்தது. படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜர் தோல்வியை தழுவியது மாணவர் முயற்சியால் மட்டுமல்ல. ஆனால் எம்ஜிஆர் ஜெயித்ததற்கு ஒரே காரணம் அவரது புகழ்தான், அவர் மீது மக்கள் சரியாகவோ, தவறாகவோ வைத்த நம்பிக்கை.அவர் மக்கள் முன்னெ வைத்த பிம்பம். அவர் உண்மையாகவே நினைத்த மதுவிலக்கைக்கூட கைவிட வேண்டியதாயிற்று. ஊழலும் அவர் ஆட்சியில் இல்லாமல் இல்லை.
இன்று நடப்பது யாருக்கு பலனளிக்கும். ஈழத்தில் வாழும் தமிழருக்கு நிச்சயம்மாக அல்ல. செல்வி ஜெயலலிதா மீதும், திரு கருணாநிதி மீதும் இதில் மக்களுக்கு நம்பிக்கையில்லை, ஆனால் ஓட்டு விழுவது இதைப்பொறுத்ததா என்று என்னால் சொல்ல முடிய வில்லை. வேறு யாரோ இதில் சரியாக காய் நகர்த்தினால் பலனடையலாம். அப்படி நகர்த்துபவர் தனித்து நின்றால் மக்களை தன் பின் நிற்கச்செய்தால் வெல்லலாம். இருக்கும் இரண்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தேர்தலுக்கு பின் அவர்கள் கை விடப்படலாம்.
இன்றைய அரசியலில் இவ்விரு கட்சியிலும் இல்லாமல் கட்சி நடத்துபவர்கள் நாடாளுமன்றத்தேர்தலை தனித்து சந்தித்தால் பலன் கிடைக்கும்.
நான் அரசியல் விளைவுகளையே சொல்லக்காரணம் இதைத்தவிர்த்து ஒரு நல்ல விளைவும் இதனால் நடக்கவில்லை, நடக்கப்போவதுமில்லை.  நடந்த ஆட்சி மாற்றங்கள் மக்களை மேம்படச்செய்யவில்லை. நாளை ஆட்சிகள் மாறினாலும் எதிர்பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. 

Wednesday, 3 April 2013

ஈழம்



எனது எண்ணங்கள்
தமிழ்நாட்டில் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை ப்பற்றி எழுத முற்பட்டதின் விளைவு இது. தீப்பற்றி எரியும் நிகழ்வு ஈழப்போராட்டம். கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து மாதக்கணக்கில் போராடுகின்றனர். இணையத்திலும் ஊடகங்களிலும் எழுதுபவர்கள் இப்போராட்டத்தை ஒட்டியும், வெட்டியும் எழுதும் இவ்வேளையில் ஒரு நிலை எடுக்காதவர்களை தமிழனே அல்ல. துரோகி என்பது போன்ற அடையாளங்கள் முன்வைக்கப்படுகின்றன. நானும் என் கருத்துக்களை எழுத விழைகிறேன். என் பார்வையில்.
தமிழ் என்ற மொழியினால் ஒன்று பட்ட அதனால் ஒரெ இனமென்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தமிழ்நாட்டின் தென்கீழ் எல்லையில் இருந்து ஆறேழு கல் தொலைவில் உள்ள மக்களைப்பற்றிய விஷயமிது. 
இவர்கள் என்றோ ஓர் நாளில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து அங்கு சென்றவர்கள். இலங்கையில் இருக்கும் மற்றொரு இனம். பாரத கண்டத்தின் வேறு ஒருபகுதியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். இது வரலாற்றுக்கூற்று. இன்று அல்லது சற்று முந்தைய காலத்தில் இவரிடையே எழுந்த சண்டையில் தமிழர்களின் நிலைப்பாடு, இன்றைய நிலையில் இல்லாமல் (not current state but over a period) சில கால வேளையாய் பார்க்க வேண்டுகிறேன்.
ஒரு ஆரம்பமாக ஆயிரத்து தொள்ளாரத்து நாற்பதுகளை எடுத்துக்கொள்ளலாம். இன்றைய நிலையை மட்டும் பார்க்க வேண்டும் என்பவர்க்கு எனது பதில். இது நம்மை மட்டும் பொறுத்த விஷயமல்ல. நமது செயல்கள் பாக் சந்திக்கு அப்பால் இருப்பவர்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். இல்லை யென்றால் சில பத்திகளை கடந்து செல்லவும்.
பூகோளரீதியாக அடுத்து உள்ளதால் யாழ் தமிழர்கள் பல வகையில் தமிழகத்துடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் சிங்களவர் பாரத தேசத்துடன் உறவில் இல்லை. அவர்கள் இன்றைய இந்தியாவைப்பார்ப்பது ஒரு சண்டியரைப்பார்ப்பது போல. இந்திய அரசு அரசியல், பாதுகாப்பு ரீதியாக இலங்கை அரசை பல வகையிலும் அண்ட வேண்டிய நிலையில் உள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு ராஜாங்கம் வெள்ளையர் கையில் இருந்ததால் மக்கள் பயணிப்பது ஒரு வகையில் சுலபமாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பு கூட இலங்கை தனித்தே ஆளப்பட்டு வந்தது. அப்பொழுது கல்வியில் யாழ் தமிழர் முன்னேறி இருந்ததால் அரசு, மற்றும் தனியார் பதவிகளில் அவர்கள் விகிதத்திற்கு மேல் இருந்தனர். அப்பொழுது இங்கிருந்து சென்ற தமிழர்கள்(மலையக, மற்றும் வணிக, பதவி ரீதியாகச்சென்றவர்கள்) யாழ் தமிழரால் நம்மவர் என்று ஏற்றுக்கொள்ளப்படல்லை) சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்ததினால் பல தமிழர் அங்கு வாழும் உரிமை இழந்து வெறும் கையுடன் தமிழகம் திரும்பினர். அன்று யாழ் தமிழர் மலையகத்தமிழரை ஆதரிக்க்கத்தவறியது மட்டுமல்லாமல் அவர்களை வெளியேற்றுவதில்சிங்களவர்க்கு உடன் போனார்கள் என்பது வரலாற்று உண்மை.
நாற்பதுகளில் அரசு பதவிகளில் பெருவாரியாக யாழ் தமிழர் இருந்தது பெரும்பான்மையான சிங்களரை உறுத்தியதால் ஏதோ ஒரு விதியைக்கொண்டு வந்து தமிழரை ஒடுக்க ஆரம்பித்தனர். இது முறையா என்பது ஒரு புறம் இருக்க கல்வியிலும் ஒரு விதியைக்கொண்டு வந்து அதிலும் தமிழர் நிலை மோசமானது.
இதற்கு யாழ் தமிழரிடம் பல வகையில் எதிர்ப்பு தோன்ற ஆரம்பித்தது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து போய் அங்கு வேலை பார்த்த மலையகத்தமிழர் என்று அழைக்கப்பட்ட தமிழர் நிலை அனாதையாக்த்தான் விடப்பட்டது. அவர்களில் சிலர் அங்கு குடியுரிமை பெற்றிருந்ததால் அவர்கள் அங்கு இருக்க முடிந்தது.
அதற்கு பின் எண்பதுகளின் துவக்கத்தில் தீவிரம் பெற்ற ஆயுதம் தாங்கி போராடிய முயற்சிகளில் யாழ் தமிழர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ் முஸ்லீம்களும் மலையகத்தமிழரும் இதில் கலந்து கொள்ளவில்லை என்பதும் வரலாற்று உண்மை. எண்பதுகளீன் தொடக்கத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் தர்ம நெறிகள் இரு தரப்பிலும் கடைப்பிடிக்கவில்லையென்பதும் வரலாற்று உண்மை. இதற்கு நான் எண் கண்ணால் கண்ட சாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதல் ஆவணங்கள். அதில் தொலைக்காட்சி நாடாவில் முதல் மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிங்கள காவலரைப் பார்த்தேன். அன்றைய கால கட்டத்தில் அகதிகளாக வந்த தமிழரை இயன்ற வரையில் உதவியவர்கள் பலர். அதில் நானும் ஒருவன். ஆனால் அவர்களின் ஒற்றுமையின்மை புலிகளின், குறிப்பாக பிரபாகரனின் செயற்பாடுகளில் எனக்கு ஒவ்வாமையே ஏற்பட்டது. TELO, PLOTE பொன்ற அமைப்புகள் சிங்கள அரசை விட புலிகளால் வேட்டையாடி அழிக்கப்பட்டதும் உண்மை. 
தொண்ணூற்று ஒன்றில் ராஜீவ் காந்தி கொலையுண்ட பொழுது ஒட்டு மொத்த தமிழகமும் விடுதலைப்புலிகளுக்கு எதிரானதும் வரலாற்று உண்மை. அன்று அக்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாதாடக்கூட எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை. மக்கள் அன்றும் பின்னர் சில காலங்களுக்கு முன் வரை இதை(ஈழ நிலையை) ஒரு பொருட்டாக கொள்ளவில்லை. இதுவும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம். 
இதில் அரசியல் தலைவர்கள் மக்கள் பொருட்படுத்தாதால் அவர்களும் பொருட்படுத்தவில்லை. திடீரென்று மாணவரிடையே இது பெரிதாக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. இது எவ்வாறு நிகழ்ந்தது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் கொலை ஒரு கிரியாஊக்கியாக கருதப்பட்டது. ஆனால் இரு தொடர்ந்து பரவ பின் புலத்தில் பல சக்திகளும் இருப்பதாக செய்திகள் உலவுகின்றன. 
இன்றைய நிலையில் தமிழ்நாடு தாண்டி வேறு எந்த அரசியல் சார்ந்த சாரா அமைப்புகளினால் இது ஆதரிக்கப்பட வில்லை. இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் பெரும் அல்லருகின்றார்கள். அது சிங்கள இனவாதம் சிறுபான்மையினரை வேரருக்கும் ஒரு நிகழ்வு என்பதில் அய்யப்பாடில்லை. அதற்கு இந்திய நடுவண் அரசோ, மற்ற நாடுகளோ தலையிட்டு தமிழர் துயர் தீர்க்க வேண்டுமெனில் இன்று தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் எவ்வகையில் உதவும். இதன் பலன் என்னவாக இருக்கும். இந்தியாவின் மற்ற பகுதிகளையோ, உலகின் மற்ற நாடுகளையோ ஈழத்தின் பால் கவனம் கொள்ள வைக்குமா?
காணும் பலன் நடுவண் அரசையோ, மற்ற மாநில அரசுகளையோ இது எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது வெள்ளிடைமலை. யாரும் ஈழத்தமிழர் துயர் தீர்க்க முன்வரவில்லை. இதனைப்புரிந்து கொள்ள மற்றவர்கள் நிலையிலிருந்து கொஞ்சம் யோசிப்போம். மற்ற மொழி பேசுவோர் மத்தியில் தமிழனைப்பற்றி என்ன நினைப்பார்கள். இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அவர்களைப்பொறுத்த வரையில் ருவாண்டா, பாலஸ்தீனம், போஸ்னியா போன்ற ஒன்று. ஈழத்தில்  எண்ணை அல்லது கனிமம் போல ஏதாவது வளம் இருந்தால் மேலைநாடுகள் கவனம் காட்டலாம். பனையும், பாலையும் உள்ள இலங்கையின் வட பகுதியை யாரும் விரும்பப்போவதில்லை. இந்நிலையில் நமது போராட்டம் எதிர் விளைவுகளையே அளிக்கும் என்பது என் எண்ணம்.மேலும் இப்போராட்டங்களில் புலி ஆதரவு பிம்பங்கள் பிம்பங்கள்இதற்கு நல்லதா/அல்லதா என்றால் அல்ல. காரணம் தமிழகத்தைத்தவிர வேறு எங்கும் புலிகள் மீதோ, பிரபாகரன் மீதோ நல்ல அபிப்ராயம் இல்லை.
இதற்கு வேறு வழி இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும்.  முதலில் நம் நோக்கம் என்ன? ஈழத்தில் இன்று வாழும்/வாடும் தமிழருக்கு நல்வாழ்வை பெற வழி வகுப்பது. நல்வாழ்வு என்பது அவர்கள் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதமான வாழ்க்கை. அதற்கு
ஈழப்போரை நாம் தொடர முடியுமா. இந்த கேள்வியை நான் எழுப்பக்காரணம் அது முடியாது என்று பதிவிடத்தான், அடுத்த செயல்பாடு. சிங்கள அரசை எப்படி செய்ய வைப்பது. நாம் அங்கு இப்பொழுது செய்யக்கூடியது பொருளுதவி. அதை அங்கு கொண்டு சேர்க்க உத்திரவாதமான ஒரு இடை நிருவனம். அங்கு நடைபெறும் பணிகளுக்கு ஒரு மேற்பார்வை. இதனை செய்வதற்கு சிங்கள அரசை பலம் கொண்டு பணிய வைக்க முடியாது. என்ன செய்தால் அது நடக்கும். நான் நினைப்பது நம் நடுவண் அரசை இதைச்செய்ய வைக்கவேண்டியது. இன்று பாராளுமன்ற தேர்தல் வரும் வேளையில் இதைச்செய்தால் நமது வோட்டு கிடைக்கும் என்று புரிய வைப்பதே. இதை யார் செய்வது. இன்றைய தமிழக அரசியலில் உள்ள பெரிய கட்சிகள் இதற்கு உதவாது. காரணம் இவை வேறு வகையில் நம்பகத்தன்மை இழந்தவை. என் கண்ணில் பழ.நெடுமாறன் அல்லது வைக்கொ இருவரும்தான் தென்படுகிறார்கள். இதில் வைக்கோ அவரது புலி ஆதரவால் நம்பகத்தன்மை இழக்கிறார். இதைச்சொல்லும் பொழுது வைக்கோ மீது எனக்கு உள்ள தனி மரியாதையை பதிவு செய்ய விழைகிறேன். ஆனால் அவர் இதற்கு சரியான தேர்வு அல்ல என்பதே எனது நிலைப்பாடு. பழ. நெடுமாறன் இதில் தன்னலம் கருதி எதுவும் செய்ய மாட்டார் என்பதே என் எண்ணம். இவர்களை விட்டால் வேறு யாரும் எனண்ணில் தென்பட வில்லை. 
மத்தியில் யாரை அணுகுவது. இன்றைய காங்கிரஸ் அரசையே. காரணம் அவர்கள் ஆட்சியில் உள்ளனர். ideally தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காமராஜ் போல stature& reliability இருந்தால் அவர்களை அணுகலாம். ஆனால் அவர் போன்றோர் இல்லை. அப்ப்படிப்பட்டோர் அக்கட்சியில் வளர்க்கப்படவும் இல்லை. முதலில் நமது ஒற்றுமை, அடுத்தது அதை காட்டுவது. மூன்றாவது அதை வழி நடத்துவது. இவை போன்றவையே பலனளிக்கும்.
ஒரு சுயநிலை குறிப்பு.
நான் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இன்றைய கர்நாடகத்திலிருந்து புலம் பெயர்ந்த வழி வந்தவன். உணர்வால் தமிழன். அல்லது அப்படி நம்பிக்கொண்டிருப்பவன். பெரும்பான்மைக்கருத்திற்கு எதிர்மறையாய் என் கருத்து இருப்பதால் என்னை தமிழனில்லை என்று ஒதுக்கினாலும் என் கருத்தில் விஷயமிருக்கிறதா என்று பார்க்கவும். என் வம்சாவழி நான் தேர்ந்தெடுத்து வந்ததல்ல. என் உணர்வுகளுக்கு நான் பொறுப்பு. தமிழர் நலம் கருதுவதில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல.  

Sunday, 24 March 2013

குளத்துடன் கோபித்துக்கொண்டு



நாட்டில் நடக்கும் பல விஷயங்களை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் எனக்குள் எழும் எண்ணங்களை எழுதத் தோன்றும். ஆனால் என் எண்ணங்கள் பொதுக்கருத்துக்களுக்கு முரணாக இருப்பதால் எழுதுவதற்கு ஒரு தயக்கம் வருகிறது. இது பயமா? அல்லது சபை நாகரீகமா? தெரியவில்லை. 
ஆயினும் எழுத வேண்டுவது ஒரு தார்மீக கடமை என்று தோன்றும் பொழுது எழுதுவது ஒரு அவசியமாகிறது.
இரண்டு எதிர்வினைகள்.
சில மாதங்களுக்கு முன் விஸ்வரூபம் குறித்த ஒரு சர்ச்சை. இன்று அது கமல்ஹாசனுக்கு லாபமாக முடிந்த விஷயம். அன்று கமலுக்கு சேர்ந்த கூட்டத்தில் ஒரு பகுதியேனும் அன்றும் இன்றும் தண்ணீரின்றி நசியும் விவசாயத்திற்கு சேரவில்லை.
இன்று தமிழகத்தை உலுக்கும் தமிழ் ஈழம். அன்று தொப்புழ்கொடி உறவே என்று அவர்கள் அழைத்த பொழுது சேராத தமிழகம் இன்று அதை எடுத்தது ஏன். இன்று நடக்கும் போராட்டங்களில் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏன் முன் வைக்க வேண்டும். வாழும் தமிழ் மக்களை முன் வைத்தால் போராட்டம் மேலும் ஆதரவு பெருகும்.
இந்திய நடுவன் அரசு ராஜரீதியாக இப்பிரச்சினையை பார்க்கும் விதம் இது போல்தான் இருக்கும். 
தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ளோர் பிரிவினை கோர வழி பிறக்கும், பிறக்கலாம். மேலும் இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்தால் அது இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும்.
மத்திய அரசின் மனதை மாற்ற ஒரே வழி. இவ்விரண்டு சந்தேகங்களுக்கும் உரிய உத்திரவாதம் கொடுப்பதே ஆகும். 
இது இல்லாமல் தொடரும் போராட்டம் பலனை அளிப்பது கடினம்.
இத்தலைப்புக்கு காரணம்- என் கருத்துக்கள் வெகுஜன கருத்துக்களுக்கு எப்பொழுதும் வேறுபடுவதால்