zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: May 2011

Sunday, 22 May 2011

கலைந்த சில கனவுகள்

என் கிராமம் நாலு தெரு, அதன் உள் பிரிவுகளாக சந்துகள். மின்சாரம் மட்டும் வந்து மக்கள் அதை வைத்து உற்பத்தி செய்த காலம். சினிமா ஒன்றுதான், பொழுதுபோக்கிற்கு. இரண்டு காட்சி ஏழே காலுக்கும், பத்தே முக்காலுக்கும். இரண்டாவது ஆட்டம் காத்தாடும். கொட்டகை பக்கத்திலுள்ள டவுனில். முதலாளி காரைக்குடி செட்டியார்.செபஸ்தியான் மானேஜர். முதலாளியை விட பந்தா,கெத்து, குயுக்தி எல்லாம்.முதல் ஆட்டதிலேயே இரண்டாவது ஆட்டத்திற்கும் சேர்த்து காசு பார்த்துவிடுவார். என் பத்து வயதில் சினிமா பார்க்க அம்மாவுடன் செல்வது இழுக்காகத்தெரிந்தது. இல்லா விட்டால் பண்ணையாள் சுடலைமுத்துவுடன் போகவேண்டும் அது சடை. அப்பொழுதுதான் ராமநாத மாமா ஊருக்கு வந்தார்.
சொந்த மாமா அல்ல. ராணுவத்தில் ஆபிஸர் பயிற்சியில் பாதியில் ஓடிவந்தவர். சொந்த ஊர் கொஞ்சம் கிழக்கே. தூரத்து அண்ணன் உறவில் எங்கள் ஊர்காரர் ஒருவர் இருந்ததால் இங்கு பிரச்னைகள் தீரும் வரை இருக்கலாமென்ற உத்தேசம். அவர்கள் சாதிக்காரர்கள் உயரமாக, ஒல்லியாக மாநிறத்திலிருந்து தாமிர நிறம் வரை இருப்பார்கள்.
ராமநாத மாமா எல்லோரையும் விட வளர்த்தி. சுருள் முடியை குட்டையாக வெட்டி நறுக்கு மீசை வைத்திருப்பார். ஒருநாள் இரண்டுநாள் தாடியிருக்கும் முகத்தில், பாண்ட்ஸ் பௌடரும், கத்திரி சிகரெட்டும் கலந்த வாடை. புகைப்பது இப்பொழுது போல் குற்றமாக கருதப்படாத காலம்.அவரிடம் இந்த வாசனையை முகர்ந்து கொண்டே அவருடன் கூட நடக்க பிடிக்கும். நல்ல வாயல் வேட்டி. இரட்டை மடிப்பு. நுனியை கையில் பிடித்து கொண்டு கொண்டு வேகமாக நடப்பார், ஆனால் நான் கூட நடக்கும் போது வேகத்தை குறைத்துக்கொள்வார். ஊர் விஷயங்களை என் வயது பாராமல் பகிர்ந்து கொள்வார். பத்து வயது சிறுவனுக்கு ராமனாத மாமாவை ப்போன்றவர்கள் ஆதர்ஸங்களாகத்தெரிவார்கள். உலக விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே வருவார்.
ராணுவத்தில் டாங்கை எப்படி ஓட்டுவது என்பன போன்ற விஷயங்கள்(டாங்கின் சக்கரங்கள் ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்டு தனித்தனியாக உருளும்).ஊருக்கு மேற்கே மலைத்தொடர். அடிவாரம் ஏறினால் மலைக்காடுகள். வனத்தின் ஓரம் வரை சென்று வருவோம். அக்காலத்தில் யானைகள் ஊர் தோட்டங்களுக்குநீர் தேடி வந்துவிடும். கொஞ்சம் பயமாக இருப்பினும் அது ஒரு சுவாரஸ்யம்.
பொன்னழககா காட்டு வேலைக்கு போகும். பொன்னழகு என் வீட்டில் வேலைசெய்பவர்.  அக்காலத்தில் வருடம் முழுவதும் வேலை செய்துவிட்டு கடைசியில் மொத்தமாக சம்பளம் வாங்கிக்கொள்ளும். பொட்டு தங்கம் அல்லது பாத்திர பண்டம் வாங்கி கொள்ளூம். எப்போதொ நடக்கப்போகும் கல்யாணத்திற்கு.  நான் பிறந்ததில் இருந்து வீட்டில் இருப்பதால் வீட்டில் ஒன்றாகவே நினைத்தேன். அக்கா நன்றாகவே இருப்பாள் என்று அம்மா சொல்லுவாள். லட்சணமாக இருக்கடி. கல்யாணம் கட்டி நல்லா இருக்கப்போறடி என்பாள் அம்மா.
ஒன்றும் இல்லாவிட்டாலும் அழகு அக்காவிடம் நிறைய இருந்தது. செய்யும் வேலையும் அது போலவே. ஒரு நேர்த்தியும், நளினமும் இருக்கும். அம்மா அவளுக்கு பழைய சேலையும் துணியும் தருவாள். எங்கள் வீட்டு சமையல் அவளுக்கு அத்துபடி. ராமநாத மாமா எங்கள் வீட்டுக்கு வருவது எனக்காக என்று நான் அப்பொழுது தவறாக நினைத்திருந்தேன். அம்மா அவரை நாசுக்காக வரவேண்டாமென்று சொன்ன பொழுது கூட நான் அவருடன் பழகுவது பிடிக்கவில்லை என்றுதான் நினைத்தேன்.
பின்னொரு நாள் ராமநாத மாமாவையும் பொன்னழகு அக்காவையும் வேறு ஒரு சூழ்நிலையில் பார்க்கும் வரை.
விவசாய குடும்பத்தில் பிறந்ததால் வயல், மற்றும் காட்டுவேலைக்கு அம்மாவுடனும், பண்ணையாட்களுடனும் போக வேண்டும். பள்ளியில்லாத நாட்மளிலும் விடுமுறையிலும். ஊரைவிட்டு வெகு தூரத்தில் உள்ள காட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலைகள் ஒரு ரசமாக இருக்கும். இரவு வேளைகளில் தங்க வேண்டியதும் வரும். அது போல ஒரு நாள், இரவில் காட்டிலிருந்து வர வேண்டிய தாயிற்று. வரும் வழியில் ராமநாத மாமவும் பொன்னழகு அக்காவும் ஒன்றாகச்செல்வதை பார்த்தேன்.
சிறு வயதின் ஆர்வத்துடன் பின்னேயே சென்றேன்.
காமம் எனக்கு அப்பொழுது இதிகாச காதலாகத்தெரிந்தது. என் கற்பனையில் அவ்விருவரும் ஆதர்ச காதலராகத்தெரிந்தனர். அவர்களை பல இடங்களில் பின் தொடர்ந்தேன். ராமனுக்கு அனுமன் போல என்னை நினைத்துக்கொண்டேன். 
கருப்பு வெள்ளைப்படங்களில் வரும் கதாநாயகன், நாயகி போல் அவர்கள் என் கண்களில். யாருக்கும் தெரியாமல் அவர்கள் சந்திப்பது எனக்கு மட்டும் தெரிந்தது.
கவனமாக அவர்கள் இருந்தாலும், என் அம்மாவின் கண்களுக்குத்தப்பவில்லை. ஒரு நாள் பொன்னழகை தனியாக இழுத்துச்சென்று ஏதோ விசாரிப்பதை தெரிந்து கொண்டு மாமாவைத்தேடிச்சென்றேன். விஷயத்தை சொன்னவுடன் அவர் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என் கற்பனையில் அவர்கள் இருவரும் கிராமத்து வீதிகளில் மணம் செய்து கொண்டு வருவதைப்போலவும், யார் எதிர்த்தாலும் வாழ்ந்து காட்டுவது போலவும். அல்லது இருவரும் ஓடிப்போய் எங்கோ வாழ்வதைப்போலவும். பல வருடங்கள் கழித்து, ஏதோ ஒரு நகரத்தின் வீதியில், அவரை ஒரு அலுவலாரகவும், அக்காவை இரு குழந்தைகளுடனும் பார்ப்பது போலவும் எல்லாம் கனவு கண்டிருந்தேன்.
எனக்குத்தெரிந்தாலும் வெளியே என்னால் சொல்லமுடியவில்லை. ஒரு பார்வையாளனாககூட நான் இல்லை. என் வயது, மற்றும் வீட்டு நிலைமையினால் நான் இந்த நாடகத்தில் ஒரு அங்கம் கூட வகிக்கவில்லை. மனம் பொறுக்க முடியாமல் அம்மாவிடம் ஓடி அவர்களுக்காக வாதாடினேன். அது வரை அம்மாவுக்கு எனக்கு இந்த விஷயம் தெரியும் என்று தெரியாது.
ஏனோ என்னைத்தவிர மற்றவர்களெல்லாம் இதை வேறு மாதிரி பார்ப்பதாகத்தோன்றியது.
சினிமா பார்த்து ரொம்ப கெட்டுபோயிட்டடா, ஒழுங்கா பாடத்தை படிக்கிறத விட்டுட்டு இது மாதிரி செஞ்சுக்கிட்டிர்ந்தா, அப்பா கிட்ட சொல்லி ஹாஸ்டல போட்டிருவேன். இதைப்பத்தி வெள்யே யார்கிட்டயாவது சொன்னே. கொன்னுறுவேன்.
அம்மாவின் பெரிய ஆயுதம் ஹாஸ்டலில் சேர்த்து விடுவேன் என்பதுதான். நான் பள்ளிக்கு செல்லும் வயது வந்தவுடன் ஆரம்பித்த இந்த பேச்சு இது வரை முடியவில்லை. அப்பா என்னை வெளியூரில் படிக்க வைக்கவேண்டுமென்கிறார், அம்மாவுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. எனக்கு அதை ஏதோ பெரிய தண்டனை போல உருவகப்படித்தி வைத்திருக்கிறாள். நான் வீட்டில் ஒரெ பிள்ளையாதலால் பாட்டி இருக்கும் வரை வெளியூர் போய் படிப்பதற்கே இடமில்லை. ஆயினும் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து முடிவு செய்தால் என்ன ஆகும் என்று தெரியாததால் ஒரு சிறு பயம். அம்மா இந்த ஆயுதத்தை எடுத்தால் நான் படிந்து விடுவது வழக்கம். ஆயினும் காதலருக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோன்றியதால் பொன்னழகு அக்காவிடம் சென்று என் யோசனைகளை சொன்னேன். அம்மாவுக்கு தெரிந்ததும் என்னை கட்டு குண்டாகக்கட்டி அவள் அண்ணன் வீட்டில்  கொண்டு விட்டு விட்டாள். அங்கே என் வயதில் பல உறவு மற்றும் நண்பர்கள்.  மாமாவுக்கு என் வயதிலும் ஒரு வயது குறைவாகவும் இரண்டு பையன்கள். அதற்கடுத்து இரண்டு பெண்கள். எங்கள் வயதால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக திரிந்தோம்.
அவர்களை எல்லாம் என் காதலருக்கு உதவும் திட்டத்தில் சேர்த்து விட்டேன். என் வயதொத்த என் நண்பர்கள் நடுவே எனக்கு கதாநாயக அந்தஸ்து. அவர்களுக்கு உதவும் திட்டத்தில் ஏராளமான யோசனைகள் திட்டங்கள். எல்லாம் என் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. என்னால் நிராகரிக்கப்பட்டன. பத்து பதினோரு வயதில் உள்ள சிறுவர்கள் சிந்திக்கும் திட்டங்கள் நிதர்ஸனத்திற்கு கொஞ்சமும் அருகில் வரவில்லை. கனவிலும், கற்பனையிலும் நாங்கள் அவர்களுக்கு நூறு வகை வாழ்க்கையும் ஆயிரம் வகை மணமும் செய்து வைத்து விட்டோம். நனவில் நான் இங்கே அவர்கள் என் கிராமத்தில்.
நாட்கள் ஓட ஓட மற்றவர்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் குறைந்தது. நானும் இவற்றை தள்ளி வைத்து விட்டு என்வயதுக்கொத்த விஷயங்களில் நுழைந்தேன். ஒரு மாதம் கழித்து அம்மா வந்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனாள். பள்ளி அதை விட்டால் வீடு. வேறு எதற்கும் நேரம் கிடைக்கவில்லை. ஒரு மாதப்பாடங்களை நான் முடிக்க வேண்டியிருந்த்தால் வேறு எதற்கும் நேரம் கிடைக்கவில்லை. என் ஆதர்ச காதலர்களை நான் தற்காலிகமாக மறக்க வேண்டியதாயிருந்த்து. யாரிடமும் கேட்க முடியாது. சுடலமுத்து ஒருவந்தான் ஏதாவது சொல்ல க்கூடும். ஆனால் அவனுக்கு ஒன்றும் தெரியாதது மற்றுமல்ல, மடையனும் கூட.
வாரங்கள் கழித்துதான் நேரம் கிடைத்து பொன்னழகக்கா வீட்டுக்கு ஓடினேன். அக்கா அங்கு இல்லை.  கல்யாணமாகி சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாப்பிள்ளை பக்கத்து ஊர். அவர்களுக்கு சொந்தக்காரன். ராமநாத மாமாவையும் காணவில்லை. அவரைப்பற்றி கேட்கலாம். அதனால் அவர்கள் வீட்டில் கேட்டேன். அவர் ஊருக்கு போயிருப்பதாகச்சொன்னார்கள். என்ன நடந்தத்தென்று அறிய மனது துடித்தாலும், அதை அறிய வழியில்லாததால் அதை மறக்க முயன்றேன். வருடம் கடந்தது. அவ்வருடம் மாமா பிள்ளைகள் எல்லோரும் எங்கள் ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்தனர். மறுபடியும் கதாநாயக அந்தஸ்து. காதலர்கள் சந்தித்த இடங்கள் எல்லாவற்றையும் காட்டவும். அவர்கள் அமர்க்காதலை விவரிக்கவும் நேரம் போதவில்லை. சாப்பிட மட்டும் வீட்டுக்கு. மற்ற நேரங்கள் முழுவதும். காட்டிலும் மேட்டிலும். சிறுவர் விளையாட்டில் நாட்கள் போனதே தெரியவில்லை.
திடீரென்று ஒரு நாள் கதாநாயகனும், கதாநாயகியும் திரும்ப வந்தனர். தத்தம் கணவன், மனைவியுடன். சினிமாவில் இது போல் எத்தனை காட்சிகள் பார்த்திருக்கிறோம் நாங்கள். காதலர்கள் இருவரும் சந்தித்து மனமுருகும் உணர்ச்சிபூர்வமான காட்சியை தவற விடக்கூடாது என்று நாங்கள் அவர்கள் பின்னாலேயே அலைந்தோம். நாங்கள் விளையாடும் சராசரி விளையாட்டுக்களை விட இது சுவாரஸ்யமாக இருந்தது. நாட்கள் நகர நகர எங்கள் ஆவல் தாங்கமுடியாத அளவு ஆயிற்று. ராமநாத மாமா ஊருக்கு போய் விட்டதால் எங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
வந்தவர்கள் எல்லாம் ஊருக்கு போய்விட இந்த காதல் கதையை நான் மறந்தே விட்டேன். என்றோ பார்த்த ஒரு படத்தின் கதை போல.
எல்லா கதைக்கும் ஒரு சுபம் என்ற முடிவு வருமல்லவா.
அன்றுதான் என் கனவு கலைந்தது. பொன்னழகு அக்கா வீட்டுக்கு வந்திருந்தாள். அம்மா காப்பி போடுக்கொண்டே என்னாடி எப்டி இருக்கே, சங்கையன் நல்லா வைச்சுருக்கானா என்று கேட்டாள். நான் அங்கிருப்பது அவர்களுக்கு தெரியாது.
அக்கா படீரென்று அம்மா காலில் விழுந்தாள். நல்ல வேளை என்ன கடவுள் மாதிரி காப்பாத்தினீங்கம்மா. உங்களை நம்பலை முதல்ல, அப்பறம் நீங்க சொன்ன மாதிரியே எல்லார் முன்னாலியும் என்ன கட்டிக்கிறேன்னு சொல்லுன்னவுடனே அவெ ஓடிட்டாம்மா. எம்புருஷன் தங்கம்மா பார்த்திகிறாரு. சந்தோஷமா இருக்கேன். அய்யாவும், நீங்களுந்தே என்னை சீப்படாம காப்பத்தினீங்க.
அவர்கள் மேலே ஏதேதோ பேச நான் நகர்ந்து விட்டேன்.  கதை, கனவுகள் கலைந்து,இவற்றிலிருந்து நகர்ந்து நிஜ வாழ்க்கைக்கு வந்தது வலித்தது.

Thursday, 19 May 2011

ஒரு சாலையோரத்து டீக்கடை


அந்த சாலை ஊரிலிருந்து மலைஅடிவா ரத்தில் இரண்டு சாலையாக பிரிந்தது. ஒன்று மலை தாண்டி கேரளா சென்றது. மற்றொன்று சில கல் தொலைவில் காபித்தோட்டங்களூடே முடிந்தது. சாலை பிரியும் இடத்தில் சில கடைகளில் ஒன்று சுப்பையாவுடையது. அவர் சில வருடங்களுக்கு முன் திடீரென்று அங்கு வந்து கடை போட்டார்.கூட மனைவி. இருவரும் கெச்சலான உடம்பு. ஆனால் கடும் உழைப்பாளிகள். சில நாட்களிலேயே வியாபாரம் சூடு பிடித்தது.
சுப்பையா ஒடிசல் உடம்பு. எப்பொழுதும் மேலெ துணியில் தைத்த பனியன் போல ஒரு பனியன், கீழெ ஒரு பட்டா பட்டி துணியில் ஒரு வேட்டி. சிரிக்க மறந்த முகம். முகத்தில் பல் துலக்கும் ப்ரஷ் போல மீசை. பற்கள் இடைவெளி விட்டு கறையுடன். வாயில் எப்பொழுதும் இருக்கும் புகையிலையினால். காலையில் உணவு உண்டு விட்டு பின் புகையிலை போட்டால் எப்பொழுது வாய் கொப்பளித்து உண்பது என்று தெரியாது. வேலை இயந்திரகதியில். உணர்ச்சிகள் என்பதே முகத்தில் தெரியாது. வந்து ஏழெட்டு வருடங்கள் ஆனாலும் யாருடனும் அதிகமான பழக்கம் வைத்துக்கொள்வதில்லை. காலையில் இருந்து வரவாகும் பணம் இரவில் பூட்டிய பெட்டியில் பக்கத்திலுள்ள காவல் செக்போஸ்டில் பத்திரமாக இருக்கும். அடுத்த நாள் எட்டரை மணி வண்டியில் வங்கிக்கு போய்விடும். பட்டுவாடா செய்ய வேண்டிய பணம் கணக்கு வைத்துள்ள கடைகளுக்கு நேரே கொடுக்க பட்டுவிடும். எங்கும் யாரிடமும் கடனும் இருக்காது, கடன் கொடுப்பதும் கிடையாது. காவலருக்குக்கூட கடனோ இலவசமோ கிடையாது.
மனைவி பின்பக்கம் இருந்த தடுப்பிலிருந்து வெளியே வருவது அபூர்வம். கைமணம் செய்யும் உணவில் தெரியும். அளவான ஓட்டத்துடன் சுப்பையா நிறுத்திக்கொள்வார். என்ன கூட்டம் வந்தாலும் மறு அடுப்பு ஏற்றுவது கிடையாது. பல நாட்கள் தாமதமாக வருபவர்கள் ஏதும் கிடைக்காமல் போகவெண்டியதுதான்.
காலை அய்ந்து மணிக்கெல்லாம் கறந்த பால் உலையில் காய ஆரம்பிக்கும். சுப்பையாவின் தேத்தண்ணீர் ஒரு மணமாகவும். சுவையாகவும் இருக்கும். பேருந்திலும் சிற்றுந்திலும் மலை வேலைக்கும், சுற்றுலாவுக்கும் செல்லும் மக்கள் அவர் கடையில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கினர்.
சுப்பையா அதிகாலை நான்கு நான்கரைக்கெல்லாம் எழுந்து பல் துலக்கியபடி வெளியே போய்விட்டு வரும் நேரத்தில் அவர் மனைவி குளித்து அடுப்பு பற்ற வைத்து இட்லி கடையை ஆரம்பித்து விடுவாள்.
காலையில் முதல் வண்டியில் வரும் கூட்டம் இட்லி வடையுடன் டீ, காபி சாப்பிடும்.
ஒன்பதரைக்கெல்லாம் டிபன் முடிந்து வடை தொடங்கும். டீயும் காப்பியும் ஒரு ஆறு, ஏழு லிட்டர் பால் தீரும் வரை ஓடும்.
வாடிக்கையாளர் சிலருக்கு மட்டும் மதிய சாப்பாடு, மற்றவர்களுக்கு மீந்து போன வடைதான் கிடைக்கும்.சுப்பையா மதியம் கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பார். பின்பு மலை இறங்குபவர்கள் மற்றும் வேலைமுடிந்து திரும்புவர்களுக்கும் பலகாரம் டீ காபி கிடைக்கும். மாலை மயங்க கடை ஏறக்கட்டப்படும்.
சுப்பையா முன்பு கொஞ்சம் தூரத்திலுள்ள சிறு நகரத்தில் பெரிய வணிகர். சிறு வயதில் ஒரு பெரிய கடையில் வேலைக்கு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சொந்த வியாபாரம் ஆரம்பித்து நன்றாகவே வளர்ந்தார். திடீரென்று ஒரு நாள் நஷ்டம் வந்த பொழுது எல்லாவற்றையும் பிரித்து கொடுத்து விட்டு வந்து விட்டார். நஷ்டத்திற்கு காரணம் அவரது மாமனார். சுப்பையாவின் முன்னாள் முதலாள. அவரது உழைப்பையும், வியாபார நேர்த்தியையும் பார்த்து விட்டு அவருக்கு பெண் கொடுத்தவர். மாமனார் எண்ணம் அப்படியே கூட வைத்துக்கொள்வதுதான். ஆனால் கல்யாணம் முடிந்தவுடனே சுப்பையா வெளியே வந்து கடை போட்டு நன்றாகவே வளர்ந்தார். மாமனாருக்கு உள்ளெ வருத்தம் இருந்தாலும் மருமகனுடன் நல்ல உறவும் மரியாதையுமே இருந்தது. மாமனார் ஒரு  வியாபரத்தில் கூட்டு சேரச்சொன்னார். சுப்பையாவுக்கு பிரியமில்லை. மாமனாருக்கு வருத்தம்.  அந்த வியாபாரம் கடும் நஷ்டம். மாமனார் எல்லாவற்றையும் இழக்க வே̀ண்டிய நிலைமை.   சுப்பையா அவர் சொத்தை விற்று எல்லாவற்றையும் கடனை அடைத்தார். கட்டிய வேட்டியுடன் மாமனார் முன்பு வந்து இருந்த வீட்டின் பத்திரத்தை கொடுத்துவிட்டு கிளம்பினார். அவர் நினைத்தது அவர் மனைவியையும் விட்டு விட்டு போவது என்று. அவர் மனைவி அவருடனே நடந்தாள்.
̀அங்கு புறப்பட்டவர் வந்து இறங்கியது அந்த ரோட்டோரத்தில். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு சென்று பிள்ளைகளை பார்த்து விட்டு வருவார்கள்.
வாழ்க்கை வேறு பாதையில் போனாலும் தடம் புரளவில்லை.
நாட்கள்.வாரங்கள் மாதங்கள் வருடங்களாயின. வந்த பணம் மாமனாரின் மிஞ்சிய கடனை அடைக்கவும் , அவருக்கு உதவுமே செலவளிந்தது. சுப்பையா யாருடனும் ஒட்டுவதில்லை. பேச்சு சிரிப்பு எல்லாம் அன்னியமாயின.
காலம் அதன் போக்கில் போனது. வாழ்க்கை அதனுடன். சுப்பையா தேனீரிலும், அவர் மனைவி அடுப்புடனும் வாழ்க்கையை ஓட்டினர். அவர்கள் குழந்தைகளை மனைவியின் தம்பியிடம் விட்டிருந்தனர். அவர்களைக்கூட அபூர்வமாகத்தான் சென்று பார்த்தனர். கடை, கடை மட்டுமே வாழ்க்கை ஆகி விட்டது. சக்கரம், செக்கு போல அவர்கள் வாழ்க்கையும் ஒரு வட்டத்திற்குள்.
அன்றும் அவர்கள் காலை வழக்கம் போலவே விடிய ஆரம்பித்தது.
சுப்பையா அன்று வழக்கம் போலவே வாயில் பல்குச்சியுடன் சாலை ஓரமாக வெளியில் போக நடந்தார். பொழுது இன்னும் புலராமல் இருட்டு இன்னும் மிஞ்சியிருந்தது. சிறிது தூரத்தில் மரத்தில் மோதி ஒரு வண்டி. ஓடிப்போய் உள்ளே பார்த்தபொழுது முன்னிருக்கையில் வண்டியோட்டியும் ஒரு பெரியவரும். பின்னிருக்கையில் ஒரு நடுத்தர வயதுப்பெண். பெரியவரின் மனைவியாக இருக்க வேண்டும். அடி பட்ட காயங்களுடன், மயக்கமாக. அப்பெண் கழுத்து, கை முழுவதும் நகைகள்.
சுப்பையா சிறிது தயங்கி பின் நகைகளையெல்லாம் கழட்டி பக்கத்தில் இருந்த மரத்தின் மேலே மறைத்து வைத்தார்.
கீழே இறங்கி வந்து வேகமாக ஓடி செக்போஸ்டில் உள்ள காவலரிடம் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு ஓடி வந்தார். அதன் முன் ஆம்புலன்ஸுக்கு தொலபேசியில் அழைத்துவிட்டு.
அடிபட்டவர்களை வண்டியில் இருந்து வெளியே எடுக்கும் பொழுதே வண்டி வர, எல்லோரையும் போட்டு அவர்களுடன் மருத்துவ மனைக்கு ஓடினார் சுப்பையா.
அன்று கடையை அவர் மனைவி பார்த்து க்கொண்டாள். அவர் அடிபட்டவர்களின் சொந்தங்களை கண்டு பிடித்து தகவல் கொடுக்க அவர்கள் வந்த பிறகு கடைக்கு திரும்பினார்.மீண்டும் வாழ்க்கை பழைய நிலையில். தேனீர் அடுப்பு, வடை செட்டி, கல்லாபெட்டி, கடைக்குள் படுக்கை. நாட்கள் வாரங்களாகி மாதமும் ஆயின.
ஒரு நாள் சுப்பையா கடைக்கு முன், நான்கைந்து வண்டிகளில் ஆட்கள் வந்து இறங்கினர். வழக்கமான ஆட்களல்ல. அவர்களின் வசதியும், தரமும் உடுத்தியிருந்த உடைகளிலும், அணிந்திருந்த நகைகளிலும் தெரிந்தது. அவர்களில் அடிபட்ட பெரியவரும், அந்த அம்மாவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் பணம், துணி மற்றும் நகைகள்.
அடிபட்டு சுப்பையாவால் காப்பாற்றப்பட்டவரும் அவர் மனைவியும் செல்வசெழிப்புள்ள குடும்பத்தின் மூத்தவர்கள். பெரியவர் உண்டாக்கி காப்பாற்றி வரும் தொழிலும், பணமும் அவரை அவர் குடும்பத்திலும், ஊரிலும் அவருக்கு ஒரு மதிப்பையும் மரியாதையையும் கொடுத்தது.
அவர்கள்  சுப்பையாவின் கடையில், அந்நியமாகவும், வித்தியாசமாகவும் தெரிந்தனர். பெரியவருக்கு சுப்பையாவைப்பற்றி முன் தெரியாவிட்டாலும் இப்பொழுது விசாரித்து தெரிந்தே வந்திருந்தார். அவர் பரிமாற்றம் சுப்பையாவின் முன்னாள் நிலையை மனதில் வைத்து. 
சுப்பையாவின் சுகம், மற்றும், நடத்தும் தொழிலில் உள்ள நிலவரங்களை க்குறித்து சம்பிரதாயமான விசாரிப்புகள். அவர்களிடையே பேச வேண்டிய விஷயதிற்கு வருவதற்கு ஏதோ தயக்கம். அது அவர்களை தயங்க வைத்தது.
பெரியவர் தயங்கி தயங்கி விஷயத்திற்கு கடைசியில் வந்தார். அவர் கண்ணைக்காட்ட கூட வந்தவர்கள் ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்து வைத்து அதில் பழம், தேங்காயுடன் புது வேட்டி, சட்டை, பட்டு புடவை, துணித்துண்டு, அவற்றுடன் பணக்கட்டு.
எடுத்து முன்வைத்து " தயவு செஞ்சு ஏத்துக்கணும், எங்க உயிரையும் உடமையையும் காப்பத்தினதுக்கு.”
சுப்பையா அவரைப்பார்த்த பார்வையில், எல்லோர் முகமும் மாறியது.எடுத்து வைத்த பொருட்கள் மறுபடியும் பைக்குள் போயின. அப்ப வரங்க என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டனர்.
டீக்கு பதினேழு ரூபா நாப்பது பைசா என்று ஒரு உணர்வும் இல்லாத குரலில் சுப்பையா. கொடுத்து விட்டு புறப்பட்டு வண்டியில் ஏறினர்.
பெரியம்மா கணவரிடம், பொட்டு தங்கம் கூட குறையாமல் பத்திரமா கொடுத்த மனுஷன் பைசா கூட வாங்கிக்கலை. ஆனா அல்பமா டீக்கு காசு கேட்டிட்டானே என்றாள்.
கணவர் சிரித்துக்கொண்டே ஏண்டீ நம்ம காசு அவனுக்கு வேணாமின்னா அவங்காசையுமா
நமக்கு விட்டு கொடுக்கணும். என்றார். சுப்பையாவை புரிந்த ஒரு மனுஷன்.
வண்டி புறப்பட்டது.