zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: பொலி காளை

Sunday, 21 August 2011

பொலி காளை



சங்கர் என்று அழைக்கப்பட்ட சங்கரராமன் நான். என் வாழ்க்கையில் சமூகத்தின் கோரமுகத்தை ஒன்றிரண்டு தடவை நேரே பார்த்திருக்கிறேன். இன்று நான் ஒரு கம்பெனியின் சேர்மன். சென்னையின் முக்கிய சாலையிலிருந்து பிரியும் குறுக்குச்சாலையில் இருந்த அலுவலகத்தில் நான் கம்பெனி நிர்வாகம் செய்துகொண்டிருந்தேன். என் ஆரம்பம் தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில். கொஞ்சம் நிலமிருந்ததால் ஊரில் பெரிய குடும்பம். விவசாயமும் கொஞ்சம் வியாபாரமும் இருந்ததால் வாழ்க்கை வசதியாக நடந்தது.
பக்கத்தில்இருந்த பெரிய ஊரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். நன்றாக படித்ததால் எனக்கு அப்பொழுதே நல்ல பெயர். பள்ளி முதல் என் கிராமம் வரை எனக்கு நல்ல மரியாதை. அதை எந்த வழியிலும் நான் கெடுக்கவில்லை. பள்ளியில் என்னைவிட மூத்த மாணவர்களுக்கும் நான் பாடம் நடத்தியதால் ஆறுமுகத்தை எனக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு நாள் பள்ளிக்கு செல்கையில் அந்த சம்பவத்தைப்பார்க்கும் வரை உலகம் குதூகலகமாகவும், நளினமாகவும்தான் தெரிந்தது.உண்மை சரியாக தெரிந்ததில்லை. எல்லோரும் நல்லவர்களே, எல்லோரும் ஒழுங்காகவும் சரியாகவும் நடந்துகொள்வார்கள் என்ற மாயையில் வாழ்ந்து வந்தேன்.
அந்த சம்பவம் அவன் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அப்பா அதை கேள்விப்பட்டவுடனே என்னை ஊரைவிட்டு அனுப்பிவிட்டார். காலையில் அது நடந்தது. மதியத்திற்கு முன் சென்னை செல்லும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏதோ கனவில் நடந்தது போல் சென்னையில் அத்தை வீட்டில். மறு நாளே ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். எட்டாவதில் தமிழ் வழிக்கல்வியில் இருந்து ஆங்கில வழிக்கல்வி. ஆறு மாதம் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மற்ற மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் பொழுது இதற்கெல்லாம் காரணமென்று நான் நினைத்த ஆறுமுகத்தின் மேல் அளவிலாத கோபமும் எரிச்சலும் எனக்கு ஏற்படும்.
பள்ளியில் பாடங்களும் மற்ற மாணவருடன் ஏற்பட்ட நெருக்கமும் படிப்பில் ஆர்வம் உண்டாக ஊரையும் நடந்தவற்றையும் மறக்கடித்தது.
காலம் என்னை வேறு பாதைகளில் செலுத்த கிராமத்தை விட்டு வெளியே இருக்கும் உலகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பத்தாவது வகுப்பிற்கு வரும் முன்பு படிப்பில் முன்னில். நகரத்தின் வாய்ப்புக்களை நன்றாக உபயோகித்துக்கொண்ட எனக்கு வெற்றி ஒவ்வொரு இடத்திலும் வாய்த்தது. படிப்புமட்டுமில்லாமல் வேலையிலும் வெற்றியே.
எனிலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கிராமமும் அதன் இழந்த வாழ்க்கைநினைவுக்குவரும். உடனே அதை பாதியில் ஒழித்த ஆறுமுகமும் ஞாபகத்து வருவான்.
ஆறுமுகம் ஜாதிப்பெயரை பெருமையுடன் சேர்த்துக்கொள்ளும் ஆள். அந்த ஜாதியின் முகமாக வன்முறை ஆக்கப்பட்டிருந்தது. கொலைமட்டும் செய்பவர்கள், கொஞ்சம் உயர்வு, அதனுடன் திருடுபவர்கள், கொஞ்சம் கீழ்.

என்னை விட சில வருடங்கள் மூத்தவன். வயது கடந்து பள்ளியில் சேர்ந்ததாலும், சில வருடங்கள் பரிட்சையில் தேராததாலும் பள்ளி இறுதி வகுப்பில் என்னுடன் சேர்ந்த்தான். ஆசிரியர் என்னையும் அவனையும் ஒன்றாக சேர்த்து விட்டார். டே, அவனுக்கு சொல்லிக்குடு. உன்னோட சேர்ந்தா, நல்லா படிப்பாம்டே என்று சொன்ன பொழுது மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன். ஆறுமுகம் நன்றாகவே படித்தான். ஆனால் திடீரென்று வராமல் நின்று விடுவான். ஏனென்று கேட்டாலும் பதில் வராது. பள்ளி செல்லும் வழி என் கிராமத்திலிருந்து, அடுத்த ஊர் நுழையும் வழியில் சந்து திரும்பும் இடத்தில் அவன் வீடு. வலது புறம் அவன் வீடும், இடது புறத்தில் அவன் தாய் மாமன் வீடும். என் ஊருக்கு போகும் பொழுது அவன் வீட்டில் நுழைந்து பேசிவிட்டு போவது வாடிக்கையாகிவிட்டது. அவன் தந்தை இல்லை என்று மட்டும் சொல்லியிருக்கிறான். ஆகவே காட்டையும் வீட்டையும் அவன் தாய் பார்த்துக்கொள்கிறாள். சிறிய தம்பி, தங்கைகள். அவர்கள் யாரும் அவனுடன் அவ்வளவாக ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பொழுது அது காரியமாகவும் படவில்லை.
இறுதி ஆண்டின் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் சென்று விட்டு அன்றுதான் ஊர் திரும்புகிறேன். பெரிய பையனாகிவிட்டதாக நினைப்பில் தனியாக ஊர் திரும்ம்பிக்கொண்டிருந்தேன். பள்ளியுள்ள பக்கதூரில் இறங்கி என் ஊருக்கு போகும் பேருந்துக்காக காத்திருக்கவேண்டும். அல்லது ஒரு மைல் தூரம். நடந்து விடலாம். போகின்ற வழியில் ஆறுமுகத்தின் வீட்டிலோ அல்லது வெளியிலோ பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அரட்டையடித்து விட்டு போகலாமென்று அவன் வீட்டுப்பக்கம் போனேன். போகும் வழியில் அந்த கோரத்தைப்பார்த்தேன்.
ஆறுமுகத்தின் தாய்மாமன் எனக்கு முன்னெ நடந்து போய் கொண்டிருந்தான். வேறு வண்டியிலிருந்து இறங்கியிருக்கவேண்டும்.அவன் பின்னே நான் அவர்கள் வீடு நோக்கி போகும் வேளையில்,ஆறுமுகம் கையில் அரிவாளுடன். வரும் ஆபத்தை அவன் மாமன் அறிந்தானோ இல்லையோ. மெதுவாக நடந்து கொண்டிருந்தான். எனக்கே அது ஆபத்து என்று வெட்டு விழுந்தபின்தான் தெரிந்தது.டேய் என்ற சத்தத்துடன் முதல் வெட்டு. ஆறுமுகம்தான் வெட்டினான். சொந்த மாமனை வெட்டுவது நான் கனவில் கூட நினைக்க முடியாதது. கழுத்துக்குக்கீழ் வெட்டு வாங்கியும் ஓடாமல் திரும்பி இடுப்பிலிருந்து சிறிய கத்தியை எடுத்து ஆறுமுகத்தை குத்தப்போனார். ஆனால் அந்த முயற்சியில் முழு மனதாக ஈடுபட்டதாக தெரிய வில்லை. சம்பந்தப்பட்ட இருவருமே ஓடவோ வேறு எந்தவிதத்திலும் உணர்ச்சிவசப்படவோ இல்லை. இறுகிய முகங்களுடன், சாவகாசமாக ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டு ஒரு வாய்ப்புக்காகவும், தற்காப்புடன் சுற்றிவந்துகொண்டிருந்தனர். ஆறுமுகத்தின் மாமா கொட்டும் ரத்தத்தை கண்டுகொள்ளவேயில்லை.
ஆறுமுகத்திற்கு அவர் எந்த வகையிலும் காயத்தைஏற்படுத்தவில்லை. ஆறுமுகத்திற்கு அவரை தாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆறுமுகத்தை தாக்கவோ அல்லது அந்த இடத்தை விட்டு அகலவோ முயற்சிக்கவோஇல்லை.இதை வாய்ப்பு என்பதைத்தவிர வேறு எப்படி விவரிப்பது என்று எனக்குத்தெரியவில்லை.
நடுவீதியில் சுற்றி நிற்பவரை கொஞ்சம் கூட கவனிக்காமல் ஒரு முக்கியமான ஆனால் சாதரணமான காரியத்தை செய்வது போல் ஒருவரை ஒருவர் சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஆறுமுகத்தின் மாமா தாக்கவோ தற்காத்துக்கொள்ளவோ முயன்றதாக எனக்குத் தோன்றவில்லை. ஆறுமுகத்தை கண்டு கொள்ளவெயில்லை. ஆறுமுகம் அவன் மாமனை இரண்டாவது முறையாக வெட்டினான். அவன் மாமன் சிறிய முனகலுடன் அவனை திரும்பி பார்த்தார். அப்பொழுது கூட அவனிடமிருந்து தப்பிக்கவோ தற்காத்துக்கொள்ளவோ, தாக்கவோ முயல்வில்லை. மூன்றாவது வெட்டில் அவர் கீழே விழுந்தார். ஆறுமுகம் அவசரப்படாமல் அவர் மேல் உட்கார்ந்து கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்து பின் வலது கையையும் வெட்டி தனியாக எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒரு பையில் போட்டு நடக்க ஆரம்பித்தான். அவன் யாரையும் குறிப்பாக பார்க்கவில்லை, ஆனால் யாரையும் கண்டுகொள்ளாமல் விடவுமில்லை. இது நடக்க ஒரு கால் மணியிலிருந்து அரை மணியாவது ஆகியிருக்கும். முகம் இறுக்கமாக ஒரு உணர்ச்சியுமில்லாமல் இருந்தது. ரத்த சகதியில், தலையில்லாமல் கிடக்கும் அந்த முண்டம் வெகுநாட்களுக்கு என்னை வெருட்டிக்கொண்டிருந்தது. அது அவர் மனிதனாக இருந்தபொழுது வெள்ளை உடையில் சுத்தமாகவும், உயிருடனும் இருந்தார். கிடக்கும் அது அவரில்லை. எனக்கு முன்னே நடந்த மனிதர் கரிய நிறமாக இருந்தாலும் களையானவர். முகத்தில் மண்டியிருந்த வெள்ளை தாடி கூட ஒரு கவர்ச்சியாகத்தான் இருந்தது. சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து அவர், அதுவாக.
எப்படி வீடு வந்தேனென்று இன்று வரை நினைவில்லை. அப்பா மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த பொழுது அம்மா அவரிடம் விஷயத்தை சொன்னாள். உடனே வண்டியில் ஏற்றப்பட்டு சென்னை செல்லும் வண்டியில் பயணித்து அன்று இரவுக்குள் வெகு தூரம் வந்து விட்டேன்.
மீண்டும் ஊர் சென்றது வெகு நாட்கள் கழித்து. அந்த வழி செல்லும் பொழுது மனிதர்கள் சாதாரணமாக அவ்வழி நடப்பது ஒரு அதிசயமாக எனக்கு தோன்றியது. நகரும், அல்ல, ஓடும் காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது.
வருடங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது அந்நினைவுகள் அவ்வளவாக வருத்துவதில்லை. அந்நிகழ்வின் காரணம் தெரியாத்தால் என்னைப்பொறுத்தவரை அது முடிவு பெறாததாகவும் இன்னும் ஏதோ நடந்து அது முடிய வேண்டுவது போலும் எனக்குத்தோன்றும்.
இன்று இவ்வளவு நினைக்கக்காரணம் ஆறுமுகத்தை மறுபடியும் சந்தித்ததால்தான். என் அலுவலகம் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில். வெளிநாடுகள் பலவற்றில் வேலை பார்த்துவிட்டு அங்கு கிடைத்த அனுபவத்திலும், பணத்திலும் உருவாக்கியது. நான் மற்றவனுக்கு உழைத்தது முடிந்து, மற்றவர்கள் எனக்காக உழைக்கின்றனர்.
மாடி உள்ள வீடு வாழ்வதற்கு. பல மாடிகளுள்ள கட்டிடம் அலுவலுக்கு. பணம் ஒரு பொருட்டாக இல்லாமல் வங்கி கணக்கில் கிடந்தது. பணம் பண்ணும் ஆசையை விட, பேர் பண்ணும் ஆசையும், சாதிக்கவேண்டுமென்ற ஆசையும் என்னை செலுத்திக்கொண்டிருந்தது.
அன்று என் காரில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். ஓட்டி வண்டியை ஓட்ட அடுத்த இலக்கை யோசித்தவாறு வெளியே பார்த்த அந்த வேளையில் ஆறுமுகத்தை சென்னை சாலையில் பார்த்தேன். பள்ளியில் பார்த்த பொழுது உயரமாக ஒல்லியாகத்தெரிவான். ஒட்ட வெட்டிய தலையுடன் பூனைமீசை முகத்தில். இப்பொழுது தாடியும் மீசையும் அங்கங்கு நரை. பட்டாபட்டி உள்ளாடைத்துணியில் வேட்டியாகவும் இல்லாமல் கைலியாகவும் இல்லாமல் ஒரு உடை இடுப்பில்.நிறம் மங்கி, சதை தொங்கி, காலம் அவனை வெகுவாகவே பாதித்திருந்தது. தன்னிச்சையாக வண்டியை ஓரத்தில் நிறுத்தச்சொல்லி அவனை பார்க்கச்சென்றேன். அவனுக்கு என்னை சரியாகத்தெரியவில்லை. நான் அவனை நினைத்ததைப்போல அவன் என்னை நினைவில் வைத்திருக்க அவசியம் இல்லை. அன்று அவன் கொலைசெய்யும் பொழுது அவன் எண்ணத்தில் ஆயிரம் இருந்திருக்கும் ஆனால் நான் இருந்திருக்க ஞாயம் இல்லை. என்னில் அந்தக்கொலை ஏற்படுத்திய தாக்கம் அவனுக்குத்தெரிந்திருக்க ஞாயம் இல்லை.
எடுத்துச்சொல்ல்லி ஞாபகப்படுத்தினேன்.
வழ்க்கு கொஞ்ச நாள் நடந்ததாம். தலையையும், மச்சமிருந்த கையையும் வெட்டி எடுத்துக்கொண்டு ஆறுமுகம் மலைப்பக்கமாக கேரளா போய்விட்டானாம். அவனும் அவன் தாயும் ஒரு கிரிமினல் வக்கீலிடம் ஆலோசனை கேட்டு செய்தது. இறந்தது அவன் மாமா என்றே நிரூபிக்க முடியவில்லை, ஆகவே அவனை குற்றவாளியென்று நிரூபிக்கமுடியவில்லை. வழக்கு நடத்த காடுகரையெல்லாம் விற்க வேண்டியதாகிற்று.
சொந்தத்திடம் கெட்டபேர். ஊரைவிட்டு வந்து இங்கே சிறு வியாபாரம் செய்து பிழைக்கிறான்.இன்னொரு மாமன் மகளை கல்யாணம் செய்து கொண்டு பல ஊர்களில் வாழ்ந்து பின் இப்பொழுது இங்கே. அவ்வப்பொழுது செல்லுபடியாகும் சிறு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்துகிறான்.
பழைய விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் நினைவு படுத்திய போதிலும், அந்த விஷயம்தான் திருப்பி, திருப்பி எங்களை பேசவைத்தது. ஏன் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. மேலோட்டம்மாக பார்த்தால் இவன் அப்பனை, அவன் கொல்ல, அவனை இவன் கொன்று விட்டான். ஆனால் அதுவா காரணம்.
இவன் கொன்ற மாமனின் மகன் இதே போன்று எங்கேயோ அவன் தாயால் ஒரு பொலி காளை போல் வளர்கிறானோ? என்கோ யாரோ இதுதான் வீரம் என்று சொல்லிவிட்டு போய்விட்டதால் ஒரு சமூகமே விலை கொடுக்கிறதா?
அதன் பின் ஆறுமுகத்தை நான் பார்க்கவுமில்லை, அதைப்பற்றி யோசிக்கவுமில்லை.

No comments:

Post a Comment